இயக்குனரும் நடிகருமான சேரன் ‘சென்னையில் ஒரு நாள்’, ‘மூன்று பேர் மூன்று காதல்’ படத்தில் இரண்டு, மூன்று கதாநாயகன்களில் ஒருவராக நடித்திருந்தார். அதன்பிறகு ‘ஜே.கே. என்னும் நண்பனின் வாழ்க்கை’ என்ற படத்தை இயக்கினார். தற்போது நீண்ட இடைவெளிக்குப் பிறகு புதிய படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார்.
ஜெயம் ரவி, ஸ்ரேயா நடிப்பில் வெளியான படம் ‘மழை’. இப்படத்தை ராஜ் குமார் இயக்கினார். தற்போது இவர் இயக்கும் புதிய படத்தில் சேரன் கதாநாயகனாக நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்கியுள்ளது.
இதுகுறித்து சேரன் கூறும்போது, ‘சிறந்த கதைக்காக தேடிக் கொண்டிருக்கும் நிலையில், இயக்குனர் ராஜ் குமார் கூறிய கதை எனக்கு மிகவும் பிடித்ததால் இந்த படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டேன். துப்பறியும் கதையம்சம் கொண்ட இப்படம் எனக்கு சிறந்த ரீஎண்ட்ரியாக இருக்கும் என்று நம்புகிறேன்’ என்றார்.
விரைவில் இப்படத்தில் நடிக்கும் மற்ற கதாபாத்திரங்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களின் பட்டியல் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.